Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவராக அய்யாக்கண்ணு செயல்பட்டு வருகிறார். திருச்சி அண்ணாமலை நகரில் இவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அய்யாக்கண்ணு ஒரு புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவதூறு பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் 40 வயதான ஜெயச்சந்திரன், போலி முகவரிகளில் சமூக வலைதளங்களில் கடந்த 2 ஆண்டுகளாக அய்யாக்கண்ணு பற்றி அவதூறு பரப்பி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயச்சந்திரனைக் கைது செய்தனர். மேலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் அனைவரையும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.